Now Hiring: Are you a driven and motivated 1st Line IT Support Engineer?

Blog

மார்த்தாளின் உலகத்தில் மரியாளின் இருதயம்

Uncategorized

மார்த்தாளின் உலகத்தில் மரியாளின் இருதயம்

MARY’S HEART IN THIS MARTHA’S WORLD

THEME: மார்த்தாளின் உலகத்தில் மரியாளின் இருதயம்

TEXT: லூக்கா 10: 39-40 39.

அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

40. மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.

அன்பு நண்பர்களே,

கிறிஸ்துவுக்குள் அன்பான என் நண்பர்களே மற்றும் சகோதர சகோதரிகளே, உங்கள் யாவருக்கும் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

என் ஜெபங்களில் உங்களை நினைத்து ஒரு சிறு செய்தியை பகிர நான் வாஞ்சிக்கிறேன். இந்த சிறு செய்தி யாரோ ஒருவருக்காவது ஆசீர்வாதமாயிருக்கும் என்று நான் கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன்.

இந்த உலகம் மிக மிக அலுவலாக (Busy life) மிக மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது, கோவிடுக்கு (Covid) பிறகு வேகம் கொஞ்சம் குறையும் என்று பார்த்தால், ஜனங்கள் இன்னும் அதிக வேகமாகவும், அலுவலாகவும் ஓடி கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

மக்களின் முன்னுரிமை மாறிவிட்டதை நாம் பார்க்கிறோம். தேவனுக்கு கொடுக்க வேண்டிய முன்னுரிமையை இன்றைக்கு நாம் நம் வேலைக்கு கொடுத்துவிட்டோம், வியாபாரத்திற்கு கொடுத்துவிட்டோம், பணத்திற்கு கொடுத்து விட்டோம், நண்பர்களுக்கும் கொடுத்துவிட்டோம். தேவனுக்கு ஆராதனை செய்யக்கூட நேரமில்லாமல்/நேரம் கொடுக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்றைக்கு வேலை, வேலை , வேலை , வேலை என்று ஓடிக்கொண்டேயிருக்கிறோம், மீட்டிங், மீட்டிங், மீட்டிங், மீட்டிங், என்று ஓடிக்கொண்டேயிருக்கிறோம். படிப்பு, படிப்பு, படிப்பு, படிப்பு என்று ஓடிக்கொண்டேயிருக்கிறோம், ஏன் இன்னும் சொல்லப்போனால் ஊழியம், ஊழியம், ஊழியம், ஊழியம் என்று ஓடிக்கொண்டேயிருக்கிறோம்.

ஆனால் தேவ பாதத்தில் அமர்ந்திருப்பதை நாம் விட்டுவிடுகிறோம், தேவனுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை நாம் கொடுப்பது குறைந்துவிட்டது. சபை ஆராதனைக்கு போவதை நாம் அலட்சியப்படுத்துகிறோம். தேவனை தேடுவது குறைந்துவிட்டது

அன்பு நண்பர்களே, “தேவனுக்கு முதலில் தேவையானது நம்முடைய உறவு நமது ஊழியம் அல்ல”

மார்த்தாளும் அப்படியே தேவனுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வேலைக்கு கொடுத்தாள்

(வ- 40: மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து)

அதை அவள் சரி என்று கருதி இயேசுவினிடத்தில் சொல்லி முறுமுறுப்பதை நாம் பார்க்கிறோம்.

ஆனால் மறியாளோ அப்படியில்லாமல் (வ- 39: இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.)

மார்த்தாளின் இருதயம் இந்த உலகத்திற்குள் இருந்தது ஆனால் மரியாளின் இருதயம் இயேசுவுக்குள் இருந்தது

இயேசுவை முதலில் வீட்டிற்குள் ஏற்றுக்கொண்டது மார்த்தாள்தான், ஆனால் இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்தது மரியாள்.

“தேவனை நமக்குள் அழைப்பது முக்கியம் ஆனால் தேவ பாதத்தில் அமர்ந்திருப்பது அதைவிட முக்கியம் “

மரியாள் தேவனுக்கு தனது நேரத்தை கொடுத்தாள். தேவனுடைய பாதமே முக்கியம்

என்றுணர்ந்து அவர் பாதத்திலேயே அமர்ந்திருந்தாள்.

இன்றைக்கும் நம் தேவனாகிய இயேசு நமக்கு நேரத்தை கொடுக்க ஆவலாயிருக்கிறார்,

அவருக்கு நாம் நம் நேரத்தை கொடுப்போம்.

இது மார்த்தாளின் உலகமாயிருக்கிறது, அலுவலாய் பல காரியங்களை பிடிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறது,

இந்த “மார்த்தாளின் உலகத்தில் மரியாளின் இருதயம் நமக்கு அவசியமாயிருக்கிறது.”

நாம் நம் குடும்பத்திற்காக ஓடுவது, உழைப்பது, சேர்த்துவைப்பது எல்லாம் நல்லது, ஆனால் இவை எல்லாவற்றையும்விட தேவனின் பாதத்தில் அமர்ந்திருப்பது மேலானது, இதுவே சிறந்தது, இதுவே நம்மை விட்டு எடுப்பாதது, இதுவே நம்மைவிட்டு யாராலும் எடுத்துப்போட முடியாதது.

காரணம் நமது எல்லா ஆசீர்வாதமும் , ஆரோக்கியமும், ஆதாரமும், நன்மையையும், , பாதுகாப்பும் தேவனுடைய பாதத்திலிருந்தே புறப்பட்டுவருகிறது.

யாக்கோபு 1:17-ல் பரிசுத்த வேதம் சொல்லாகிறது, நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது;

எனவே இந்த busy-யான உலகத்தில் தேவனுடைய பாதத்தை பிடித்து கொள்ள நாம் நம்மை அர்ப்பணிப்போம்.

தேவ பாதத்தில் நம் துதிபாடல் நேரம் அதிகரிக்கட்டும், தேவ பாதத்தில் ஆராதனை நேரம் அதிகரிக்கட்டும், தேவ பாதத்தில் நம் ஜெப நேரம் அதிகரிக்கட்டும், தேவ பாதத்தில் நம் குடும்ப ஜெப நேரம் அதிகரிக்கட்டும், தேவ பாதத்தில் நம் உறவு அதிகரிக்கட்டும்.

கர்த்தருக்கு சித்தமானால் மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரனும் தேவனால் அழைக்கப்பட்ட ஊழியனுமாகிய C.J. Rajesh…

Comment (1)

  1. Glory to God, for this wonderful MESSAGE as a MAGAZINE

    June 26, 2025 at 1:06 pm

Comments are closed.